ம.பியிலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வானார் தமிழகத்து இல.கணேசன்!
டெல்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால் அந்த இடம் காலியாக இருந்தது. இதையடுத்து காலியாக இருக்கும் அந்த இடத்துக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ள அந்த பதவிக்கு, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசனை கட்சி தலைமை தேர்வு செய்தது.
இதையடுத்து இல.கணேசன் கடந்த மாதம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்று மாநில சட்டமன்ற செயலாளரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, இல.கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் சான்றிதழ் இன்று மாலை 3 மணிக்கு வழங்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.எம்.பி.க்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு ராஜ்யசபா எம்.பி. இடம் காலியான போதே அந்த இடத்துக்கு இல. கணேசன் தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.