எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக மெஜாரிட்டியை இழந்துவிட்டார்... இது சு.சாமி டுவீட்டு!
எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்துவிட்டதால், அதிமுக ஆட்சி நீடிக்க வேறு முதல்வர் சசிகலாவிடம் அவர் கேட்க வேண்டிய நேரமிது என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 111 எம்எல்ஏக்கள் பங்கேற்றதாக தெரிவித்தார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 9 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் கூறினார்.
ஸ்டாலின் கேள்வி
எனினும் முதல்வர் பழனிசாமிக்கு மெஜாரிட்டி இல்லை என்பது அவர் நடத்திய கூட்டத்திற்கு வந்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை வைத்தே தெரிகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். 111 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவளிக்கும் முதல்வர் எப்படி மெஜாரிட்டி முதல்வராவார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் உத்தரவிட வேண்டும்
ஆளுநர் காலதாமதம் செய்வது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்றும், இனியும் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் முதல்வருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
|
மெஜாரிட்டி இல்லை
இந்நிலையில் எடப்பாடி அரசு குறித்து பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் அதிகாரக்பூர்வமாக எடப்பாடி பழனிசாமி மெஜாரிட்டியை இழந்து விட்டார் என்று கூறியுள்ளார்.
திமுக உட்புகும்
மேலும் தற்போதைய சூழலில் அவர் சசிகலாவிடம் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்று கேட்க வேண்டிய நிலையில் உள்ளார். அப்போது தான் அதிமுக அரசு நீடிக்கும், இல்லாவிட்டால் திமுக உட்புக நேரிடும் என்றும் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.