கற்ற 'வித்தைகள்' அத்தனையையும் 'இறக்கி' ஜெயிச்சுட்டாங்களே.. பாஜக வேட்பாளர் புலம்பல்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிகார பலம், பண பலம் உட்பட அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, அதிமுக வெற்றி பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார் பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம்.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று அதிமுக அபார வெற்றி பெற்றது. திமுகவிற்கு இரண்டாம் இடம் கிடைத்தது. பாஜக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு வாக்குகள் தேறவில்லை.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தோல்வி குறித்து பாஜக வேட்பாளர் சுப்பிரமணியம் கூறியதாவது:-
ஆளுங்கட்சி அதிகார பலம், பண பலம் உட்பட அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தியே மக்களை தங்கள் பக்கம் இழுத்து வருகின்றன. இடைத்தேர்தலில் திமுகவும் குறைவான ஓட்டுகள் பெற்றுள்ளதால், மக்கள் அவர்களையும் புறக்கணித்து விட்டனர்.
இடைத்தேர்தல்களில் ஜனநாயகம் கேலிக்கூத்தாகி வருகிறது. மக்களுக்கு கொடுத்து பழக்கப்படுத்தி விட்டதால், பிரசாரத்திற்கு செல்லும் போது மக்கள் எல்லோரிடமும் பணத்தை எதிர்பார்க்கின்றனர். அதிமுகவினர் பணத்தை கொடுத்து விட்டு சத்தியமும் வாங்கி உள்ளனர்.
இப்படியெல்லாம் ஓட்டு வாங்கிவிட்டு அம்மா ஆட்சிக்கு கிடைத்த வெகுமதி என எப்படித்தான் கூசாமல் சொல்கின்றனரோ? வரும் 2016ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வளர்ச்சிக்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் மக்கள் ஓட்டுப் போடுவர்; அப்போது பாஜக வெற்றி பெறும்.
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்று சக்தி, பாஜக என்பதில் சந்தேகமில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.