ஆர்.கே.நகரில் ஓரிரு நாளில் பாஜக வேட்பாளர்..கங்கை அமரன் ஏன் களமிறங்கவில்லை தெரியுமா?- வானதி பதில்
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் யார் என்பது இறுதி செய்யப்பட்டு ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் என்று அந்தக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதி கடந்த 11 மாதங்களாக ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. பிரதான கட்சியின் வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். இதுவரை திமுக, அதிமுக, தினகரன் உள்ளிட்ட 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதே போன்று சுயேட்சை வேட்பாளர்கள் 9 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திங்கட்கிழமையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் நிலையில் அன்று தீபா வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது கங்கை அமரனை வேட்பாளராக அறிவித்து உற்சாகமாக வாக்கு சேகரித்த பாஜக இந்த முறை இதுவரை வேட்பாளர் அறிவிப்பை வெளியிடவில்லை.
பாஜக வேட்பாளர் யார்?
இதனால் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடுகிறதா, அல்லது தங்களது ஆதரவை அதிமுகவிற்கு அளித்து ஒதுங்கி நிற்கப் போகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் வேட்பாளர் தேர்வு குறித்து பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
கங்கை அமரன் ஏன் அறிவிக்கப்படவில்லை?
திமுக, அதிமுக மற்றும் தினகரன் என கடந்த முறை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களே இந்த முறையும் போட்டியிடுகின்றன. ஆனால் பாஜகவின் வேட்பாளர் கங்கை அமரன் இந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்படாததற்கு அவருக்கு உடல்நிலை சரியில்லாததே காரணம்.
விரைவில் வேட்பாளர்
பாஜக வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது, ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டால் ஏற்கனவே அவர்கள் வாக்காளர்களுக்கு கொடுத்த காசு வேலை செய்யும், அதோடு தொப்பி சின்னமும் பிரபலமாகிவிட்டது.
தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்
அதனால் தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குவது சரியாக இருக்காது. எனினும் இறுதி முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில் தான் இருக்கிறது என்று வானதி தெரிவித்துள்ளார்.