பாஜக கூட்டணிக்கு தேமுதிக வரும்... நம்பிக்கையுடன் காத்திருக்கும் முரளிதர் ராவ்
சென்னை: தனித்து போட்டி என்று விஜயகாந்த் தெளிவாக அறிவித்த பின்னரும் கூட்டணி விருந்துக்கு வாங்க என்று வருந்தி வருந்தி அழைத்து வருகின்றன சில அரசியல் கட்சிகள். பாஜக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு வரும் நம்பிக்கையை இன்னமும் நாங்கள் இழக்கவில்லை என்று பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்து உள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 59 நாட்கள் மட்டுமே உள்ளது. பல கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை நடத்தி வருகின்றன. பாஜகவும் பல குட்டிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அக்கட்சியின் மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ், சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர், திமுகவோ, அதிமுகவோ மீண்டும் தலையெடுக்கக் கூடாது என்பதில் உண்மையாக உள்ள சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும். கடந்தகால தேர்தல்களைப் போல், அதிமுக அரசுக்கு எதிரான வாக்குகள், இந்த முறை திமுகவுக்கு கிடைக்காது. இந்த இரு கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக. திகழ்கிறது என்றார்.
பாஜக கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாக இன்னும் நாட்கள் இருப்பதால், தேமுதிகவை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.
இந்த தேர்தலில், தேவை என்றால் முதல்வர் வேட்பாளரை முன் கூட்டியே பாஜக அறிவிக்கும். தமிழக வாக்காளர்களில் 1 கோடியே 34 லட்சம் வாக்காளர்கள் இளைஞர்கள். இவர்களை ஈர்க்கக் கூடியதாக பாஜகவின் பிரசார வியூகம் இருக்கும்" என்றார்.
தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் தெளிவாகத்தானே சொன்னார். எங்கள் கூட்டணிக்கு வருபவர்கள் வரலாம் என்றுதானே பிரேமலதா கூறினார். ஆனால் முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று பாஜக இறங்கி வந்து பேசுவதைப் பார்த்தால், திரைமறைவில் பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
எது எப்படியோ பாஜகவின் காத்திருப்பு 'இலவு காத்த கிளி' கதையாகாமல் இருந்தால் சரிதான்!