கிலி கிளப்பும் வேட்பாளர்கள்... அடுத்த விக்கெட் யாரு?... அடிவயிற்றில் நெருப்போடு திணறும் 'தாமரை'!
சென்னை: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே கத்தி மேல் நடக்கும் நிலை தான் பாஜகவிற்கு. எப்படியும் நாடாளுமன்றத் தேர்தல் போலவே தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என தலைகீழாக நின்று தண்ணீர் குடித்துப் பார்த்தார்கள். ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லை. தேமுதிகவை மக்கள் நலக்கூட்டணி வசம் செய்து விட்டது.
அதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய சரத்குமாரை வளைத்துப் போட திட்டம் போட்டார்கள். ஆனால், அவரும் திடீரென மனம் மாறி, மீண்டும் அதிமுக கூட்டணியிலேயே சேர்ந்து விட்டார்.
இப்படியாக கூட்டணி குழப்பங்களுக்கு மத்தியில் பெரிய கட்சிகள் எதனுடனும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளானது பாஜக. இதற்கிடையே, இந்த குழப்பங்களுக்கு மத்தியிலேயே அக்கட்சியில் விருப்பமனுத் தாக்கல் நடைபெற்று, வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்றது.
குழப்பம்...
பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுத்தாக்கல் செய்திருந்த மூவாயிரம் பேரில் சரி பாதி பேர் புதியவர்கள். இதனால், புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாமா, இல்லை பழைய விசுவாசிகளையே மீண்டும் களமிறக்கலாமா என மீண்டும் தலைமைக்கு குழப்பம் ஏற்பட்டது.
சந்தேகம்...
பின்னர் ஒருவழியாக இரண்டும் சேர்ந்த கலவையாக பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது. ஆனால், வெளியில் பகிரங்கமாக வேட்பாளர்களை மாற்றக்கோரி அவ்வளவாக பிரச்சினைகள் நடக்காவிட்டாலும், பல வேட்பாளர்கள் மீது கட்சியினருக்கு சந்தேகமே இருந்து வந்துள்ளது.
கந்தசாமி...
அதனை மெய்ப்பிப்பது போல், வேட்புமனுத் தாக்கலின் போது பல குளறுபடிகள் அரங்கேறின. பாஜக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாசை எதிர்த்து பென்னாகரத்தில் களமிறக்கப்பட்ட பாஜக வேட்பாளர் கந்தசாமியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'உங்கள் மீது குற்றவழக்கு இருக்கிறதா? இல்லையா?' என்ற ஒற்றைக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தவறவிட்டதன் விளைவால், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு மாற்றாக மனுத்தாக்கல் செய்த டம்மி வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதால் பாஜக் அதிர்ச்சி அடைந்தது. பாமகவின் சதியே இதற்குக் காரணம் என கட்சித் தலைமைக்கு புகார் பறந்ததைத் தொடர்ந்து, கந்தசாமி கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
அதிமுகவிற்கு தாவல்...
இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே பாஜக வேட்பாளராக திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத்தின் நிர்வாகி முத்துக்குமார், திடீரென அதிமுகவுக்கு தாவினார்.
எதிர்பார்த்த அலையில்லை...
இதற்கிடையே பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்ற பொதுக்கூட்டங்களுக்கு எதிர்பார்த்த அளவு கூட்டம் வராதது கட்சித் தலைமையை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. மாநிலத் தலைவர்களின் நிர்வாகம் சரியில்லை என கட்சித் தலைமை அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
அதிர்ச்சி...
இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்து வேட்பாளர்களின் அதிரடிகளால் பாஜக கிறுகிறுத்துப் போயுள்ளது என்றால் மிகையில்லை. முத்துக்குமாரைத் தொடர்ந்து இன்னும் சிலர் தேர்தலுக்கு முன்னரே பணத்துக்கு விலை போகலாம் என்ற அதிர்ச்சித் தகவலும் கட்சித் தலைமையின் காதுக்கு போயுள்ளதாம்.
இது தான் திட்டம்...
எப்படியும் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கிவிட வேண்டும் என தீயாய் வேலை செய்த தொண்டர்கள் பலர், பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லையாம். காரணம், கடைசி நேரத்தில் மற்ற கட்சிகளுடன் பேரம் பேசி, குறிப்பிட்ட லாபம் பார்த்து போட்டியில் இருந்து விலகிவிட வேண்டும் என்ற திட்டம் தான் என்கிறது கட்சி வட்டாரத் தகவல்கள்.
மனக்கணக்கு...
எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு தோற்றுப் போவதைவிட, கிடைக்கும் தொகைகளைச் சுருட்டிவிடலாம் என வேட்பாளர்கள் மனக்கணக்குப் போடுகின்றனராம். மற்ற கட்சிகள் எல்லாம் பணப் பரிமாற்றத்தைத் தீவிரமாகக் கண்காணிக்கும்போது, தங்களின் சொந்த வேட்பாளர்களை கண்காணிக்க வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது வேதனையான உண்மை.
கோட்டை விட்ட பாஜக...
இதனால் 'அடுத்து எந்த வேட்பாளர் என்ன செய்வார்?' என்ற அச்சத்திலேயே நாட்களைக் கழிக்கிறது தமிழக பாஜக. சரியான திட்டமிடல் இன்றி, வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டதால் தான் இந்த அவஸ்தை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.