பென்னாகரத்தில் அரைகுறையாக வேட்பு மனு தாக்கல்.. வேட்பாளரை சஸ்பெண்ட் செய்த பாஜக!
சென்னை: பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் அரைகுறையான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர் ஆகியோர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அன்புமணி போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் பாஜக சார்பில் கே.பி. கந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மாற்று வேட்பாளராக முருகேசன் அறிவிக்கப்பட்டிருந்தார். மனுக்கள் பரிசீலனையின்போது இரு மனுக்களும் முறையாக இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டு விட்டன. இதனால் பாஜக அதிர்ச்சி அடைந்தது. இருவருமே மனுக்கள் தள்ளுபடி ஆக வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென்றே அரைகுறை வேலையைப் பார்த்ததாகத் தெரிகிறது. இதையடுத்து இருவரையும் தற்போது கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாரதீய ஜனதா கட்சி சார்பாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் வேட்பாளராக மனுதாக்கல் செய்த கே.பி.கந்தசாமியின் வேட்புமனுவும், அவருக்கு மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்த கே.இ.முருகேசன் வேட்பு மனுவும் விதிமுறைகளுக்கு உட்படாத வகையில் இருந்தன என்ற காரணத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அவர்கள் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தும் இந்த வேளையில், அவர்கள் இருவரும் தற்காலிகமாக அவர்களது பொறுப்புகளில் இருந்தும், கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் கட்சி சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அவர்களுடன் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழிசை கூறியுள்ளார்.