மோடியைப் போலவே ஸ்ரீரங்கத்திலும் ஹைடெக் பிரச்சாரத்தில் பாஜக!
திருச்சி: மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி பயன்படுத்திய நவீன தொழில்நுட்ப உத்திகளை அப்படியே ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலிலும் பயன்படுத்துகிறது பாஜக.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரசாரம் வருகிற 11-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இப்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
அ.தி.மு.க. சார்பில் முன்னணி நிர்வாகிகளும், அமைச்சர்களும், தி.மு.க.விலும் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கிராமங்கள் தோறும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
பா.ஜ.க.வில் மாநில தலைவரும், நிர்வாகிகளும் பிரசாரம் செய்கின்றனர். கம்யூனிஸ்டு கட்சியிலும் மாநில நிர்வாகிகள் ஒரு புறம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் நவீன தொழில்நுட்ப பிரசார யுக்தியை கையாண்டுள்ளனர். வாட்ஸ்-அப், முகநூல், யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பிரசாரம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர். ஜெயலலிதாவின் குரலை கணினியில் பதிவு செய்து செல்போன் மூலம் அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இணையாக பா.ஜ.க.வும் நவீன தொழில் நுட்பம் மூலம் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக நடமாடும் எல்.இ.டி. திரை வாகனம் மூலம் பிரசாரம் செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளனர். இந்த வாகனம் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பிரமாண்ட எல்.இ.டி. திரை, ஹைட்ராலிக் மேடை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக்கூடிய வசதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரத்தின் போது இந்த வாகனத்தைப் பயன்படுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த பிரசாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இனி வரும் நாட்களில் இந்த பிரமாண்ட திரையில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் பிரச்சார பேச்சுகளை ஒளிபரப்பி வாக்கு சேகரிக்கப் போகிறார்களாம் பா.ஜ.க. நிர்வாகிகள்.
பிரதமரே நேரில் வந்து பிரச்சாரம் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தப் போகிறார்களாம்.