ரஜினியை மட்டுமல்ல தேசிய நலனில் அக்கறை கொண்டவர்கள் எவரையும் பாஜக வரவேற்கும்: தமிழிசை
கடலூர்: நடிகர் ரஜினியை மட்டுமல்ல தேசிய நலனில் அக்கறைக் கொண்டவர்கள் அனைவரையும் பாஜக வரவேற்கும் எனத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் தமிழிசை சவுந்திரராஜன்.
அந்தவகையில், கடலூர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் விதிமுறை மீறல்...
தமிழகத்தில் நடைபெற்று வரும் தேர்தல் விதிமுறை மீறல்கள் பற்றி பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு அறிக்கை அளித்துள்ளோம். அவர் நீங்கள் தைரியமாக தேர்தலை சந்தியுங்கள் என்று கூறியுள்ளார்.
நடுநிலை தேவை...
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதனால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். பிரச்சினைகளை பற்றி தேர்தல் அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் சரியாக செயல்படுவதில்லை. ஆகவே தேர்தல் ஆணையம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.
ரஜினி மட்டுமல்ல...
பா.ஜ.க.வுக்கு நடிகர் ரஜினிகாந்த் மட்டுமல்ல. தேசிய நலனில் அக்கறை கொண்டவர்கள் யார் வந்தாலும் வரவேற்போம்.
ஆதரவு தேவை...
குறுகிய காலத்தில் இந்த தேர்தலை சந்திக்கிறோம். மற்ற கட்சிகள் ஒதுங்கி இருந்தாலும் பா.ஜ.க. இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. ஏனெனில் அப்போதுதான் இந்த தேர்தலில் ஆளுங்கட்சியினர் என்னென்ன பிரச்சினைகளை கொடுக்கிறார்கள் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக்கூற முடியும். இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிற தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.