பெண்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம்.. தமிழிசை முழக்கம்
சென்னை: மதுக் கடைகளை மூட பெண்களைத் திரட்டி தமிழகத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
கல்விக்கூடங்கள் நிறைந்த தமிழகத்தை மதுக்கூடங்கள் நிறைந்த மாநிலமாக மாற்றி மிகப்பெரிய சமுதாய சீரழிவுக்கு அரசே வழிவகுத்து விட்டன. எத்தனையோ குடும்பங்கள் மதுவால் சீரழிந்து நிம்மதி இல்லாமல் தவிக்கின்றன. லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாகி கண்ணீர் வடிக்கிறார்கள். இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகி வருகிறார்கள். இந்த சீரழிவில் இருந்து தமிழகத்தை மீட்டெடுக்க பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்.
மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி மாநில அளவில் பா.ஜ.கவினர் நடத்திய போராட்டத்தில் 36 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். 16 ஆயிரம் பேர் கைதானார்கள்.
மதுவிலக்குக்காக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் உயிரைவிட்டு இருக்கிறார். இதன் பிறகாவது அரசு மதுவிலக்கை உடனடியாக அமுல்படுத்த முன்வர வேண்டும்.
சசிபெருமாள் மரணத்தை தொடர்ந்து கன்னியாகுமரியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பா.ஜ.கவும் பங்கேற்றது. சர்வகட்சி முடிவுப்படி அங்கு 4-ந் தேதி முழு அடைப்பு நடத்தப்படுகிறது. இதில் பா.ஜ.க கலந்து கொள்கிறது. ஆனால், மாநில அளவில் முழு அடைப்பு நடத்துவது பற்றி குறிப்பிட்ட சில கட்சிகள் மட்டுமே அறிவித்துள்ளன. அதற்கு ஆதரவு அளிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. கட்சியின் உயர்மட்ட குழுவுடன் பேசி முடிவு செய்வோம்.
மது ஒழிப்பு போராட்டம் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுத்து வருகிறது. அரசு உடனடியாக மதுவிலக்கு பற்றி அறிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் மாநிலம் முழுவதும் பெண்களை திரட்டி அனைத்து மதுக்கடைகள் முன்பும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.