அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான்... பாஜக காணாமல் போகும்: குஷ்பு
2019 லோக்சபா தேர்தலில் பாஜக காணாமல் போகும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்.
நெல்லை: வரும் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து காணாமல் போய் விடும் என குஷ்பு குறிப்பிட்டு உள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் நகர காங்கிரஸ் சார்பில் ஐம்பெரும் விழா நடந்தது. இதில் காங்கிரஸ் செய்தி த்தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டு பேசினார். அப்போது, இதுதான் பாஜகவின் கடைசி பட்ஜெட். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கட்சி காங்கிரஸ். ராகுல் என்ன செய்தாலும் பாஜக பயப்படுகிறது.
2019ம் ஆண்டில் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைவதுஉறுதி. அனைத்து பொருட்களையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரும் மோடி அரசு ஏன் பெட்ரோல், டீசல் விலையை அதற்குள் கொண்டு வர மறுக்கிறது.
தமிழகத்திற்காக எந்தவொரு பயனுள்ள திட்டத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். அதிமுக அரசு இடைத்தேர்தலை சந்திக்க பயப்படுகிறது.
எப்படிப்பட்ட ஆட்சி வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்கள் இன்னும் காங்கிரசை நம்புகின்றனர். காங்கிரஸின் 100 நாள் வேலை திட்டம், பெண்கள் பாதுகாப்பு, கல்வி திட்டம் உள்ளிட்டவற்றின் பெயரை மாற்றி பாஜக அரசு தங்கள் திட்டம் என்று கூறுகிறது.
நாட்டில் ஜனநாயகம் என்பது அறவே இல்லை. இதனால் 2019ம் ஆண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக ஆட்சியை இழந்து காணாமல் போகும். மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்று குஷ்பு தெரிவித்து உள்ளார்.