ஜல்லிக்கட்டு- போலீஸ் தாக்குதலை கண்டித்து 150 இயக்கங்கள் பிப்.7-ல் கோட்டை நோக்கி பேரணி: வேல்முருகன்
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டனர். இதனைக் கண்டித்து பிப்ரவரி 7ம் தேதி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி பேரணி நட
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் போலீசார் தடியடி, தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் கருப்புக் கொடி பேரணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஒன் இந்தியாவிடம் கூறியதாவது: ஜாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் 150 இயக்கங்கள் ஒன்றிணைந்த தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இந்தப் பேரணி நடைபெற உள்ளது.
ஜல்லிக்கட்டுக்காக ஜாதி, மதம், கட்சிகளை கடந்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்தார்கள். அதே வழியில் நாங்களும் ஜாதி, மதம், கட்சிகளைக் கடந்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் நிகழ்த்திய வன்முறைக்கு கண்டனம் தெரிவிக்கின்றோம்.
கருப்புக் கொடி
பிப்ரவரி 7ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து கருப்புக் கொடி ஏந்திய பேரணி தொடங்கும். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி கோட்டையை நோக்கி சென்று, முடிவில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து 5 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுக்க உள்ளோம்.
வழக்கு திரும்பப் பெற..
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய போராடிய மாணவர்கள் மீதும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற பெயரில் அப்பாவி மீனவர்கள் மற்றும் தலித்துகள் மீதும் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
இழப்பீடு வழங்க..
வன்முறையில் வண்டி, வாகனம், ஜன்னல், கதவு, ஆட்டோ, தீவைத்து எரித்த பொருட்கள் என அனைத்தையும் கணக்கில் எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
வன்முறையில் ஈடுபட்ட அடிநிலை போலீசார் முதல், பொறுப்பான சென்னை ஆணையர், கோவை மாநகர ஆணையர், மதுரை மாநகர ஆணையர், மதுரை மாவட்ட எஸ்பி ஆகியோர் மீது அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியில் உள்ள நீதிபதி
இந்த வன்முறைகள் குறித்து உயர்நீதிமன்ற பணியில் இருக்கும் நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அது நியாயமாக இருக்கும். நீதித்துறையும் உண்மையை மக்களிடம் சொல்வார்கள். ஓய்வு பெற்ற நீதிபதியாக இருந்தால் அதன் விளைவு மிகவும் குறைவாக இருக்கும்.
தமிழ் அதிகாரிகள்
இதுபோன்ற பிரச்சனைகள் நடக்க அடிப்படை காரணமாக இருப்பது தமிழ் மக்களின் உணர்வு பூர்மான பிரச்சனையை அணுகும் முறையில் குறைபாடுகள்தான். தமிழ் நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளாக இருந்தால் அதனை அந்த உணர்வோடு அணுகுவார்கள். தமிழர் அல்லாத அதிகாரிகள்தான் தமிழகத்தில் உள்ளனர். வட நாட்டு அதிகாரிகளுக்கு மக்களிடம் பிரச்சனையை எடுத்து சொல்லி புரிய வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. "சொல்லுது, அது பண்ணுது, சட்ட புத்தகம் சொல்லுது, நாங்க சொல்லுது, துப்பாக்கி பாயுது" என்று அவர்கள் பேசுகிறார்கள். அதனால் இனி வரும் காலங்களில் தமிழக அரசு உயர்ந்த பதவிகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் வட மாநிலங்களில் இருந்து வரும் அதிகாரிகள் அனைவரும் தவறானவர்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.
வேண்டுகோள்
சென்னை, கோவை, மதுரை என தமிழகம் முழுவதும் இருந்து ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் இந்தப் பேரணியில் பங்கேற்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கான அறவழிப் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து தமிழர்களாக அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம் என்று வேல்முருகன் கூறினார்.