திருச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம்!
திருச்சி வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்த்து திமுகவினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
திருச்சி : திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுகவினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தை நடத்தினர்.
தமிழக ஆளுநர் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆளுநர் பன்வாரிலால் செல்லும் மாவட்டங்களில் அவருக்கு தொடர்ந்து கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடந்து வருகிறது. ஆனால், அதுகுறித்து அதைப்பற்றி கவலைப்படாமல் ஆளுநர் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இன்று காலை மலைக்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார்.
இதனையடுத்து, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு அவர் செல்லும் போது, திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த நேரு, அமைச்சர்கள் ஆதாயம் பெறுவதையே குறிக்கோளாக வைத்திருப்பதால், மாநில உரிமை பறிபோவது குறித்து எந்த வித கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.