நூதன மோசடி.. கருப்பு பணத்தை வெள்ளையாக்க கூலித் தொழிலாளர்கள் வங்கி கணக்கை பயன்படுத்திய கயவர்கள்!
கூலித்தொழிலாளர்களுக்கே தெரியாமல் அவர்கள் வங்கி கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தும் எடுத்தும் வந்த கயவர்கள் யார் என்பதை போலீசார் தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்: கருப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக அப்பாவிகள் வங்கி கணக்குகள் அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தப்படும் அதிர்ச்சி சம்பவம் அம்பலமாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில்தான் இந்த அக்கிரமம் நிகழ்ந்துள்ளது. அருகேயுள்ள பண்ணைவயல் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் அந்த வங்கியில்தான் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர்
அந்த தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அவர்களுக்கே தெரியாமல் பல லட்சம் ரூபாய் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இது பாஸ்புக்கை பார்த்த பிறகுதான் அவர்களுக்கே தெரியவந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி முதல் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. வங்கியில் பணம் செலுத்தும்போது அதற்கு கணக்கு கேட்கப்படுகிறது. ஆவணங்கள் வாங்கப்படுகிறது. இதை தவிர்க்க வங்கி ஊழியர்கள் உதவியோடு இப்படி ஒரு சதி செயலில் அப்பகுதி கருப்பு பண முதலைகளில் யாரோ ஈடுபட்டுள்ளனர்.
யார் வேண்டுமானாலும், யாருடைய அக்கவுண்டிலும், பணத்தை டெபாசிட் செய்ய முடியும் என்றபோதிலும், அதை எப்படி மீண்டும் வெளியே எடுத்தார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.