"உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின்" என நினைவிடத்தில் "எழுதி கையெழுத்திட்ட" கருணாநிதி
Recommended Video
சென்னை: கருணாநிதியின் நினைவிடத்தில் பிரம்மாண்ட மூக்குக் கண்ணாடியும், பேனாவும் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மறைந்தார். அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றைய நாள் முதல் அவரது சமாதிக்கு திமுகவினரும் , பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவர் பெரிதும் விரும்பும் முரசொலி நாளிதழ் அவர் இறந்தபோதும் கண்ணாடி பெட்டியில் தலைமாட்டில் வைக்கப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட போதும் தினந்தோறும் முரசொலி நாளிதழ் சமாதியில் வைக்கப்படுகிறது.
கருணாநிதியையும் பேனாவையும் பிரிக்க முடியாது என்பார்கள். அதுபோல் கருப்பு கண்ணாடியும் முக்கியமானதாகும். இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக கருணாநிதியின் சமாதியில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதையடுத்து பிரம்மாண்டமான கருப்பு மூக்கு கண்ணாடியும் பெரிய பேனாவும் வைக்கப்பட்டுள்ளது. ஒரு பேப்பரில் கருணாநிதியே எழுதியது போல் உழைப்பு உழைப்பு உழைப்பு அதுதான் ஸ்டாலின் என்று எழுதப்பட்டு "மு.க" என கையெழுத்திட்டிருந்தது.
இலக்கியம், எழுத்து, வசனம் ஆகியவற்றுக்கு கருணாநிதி எத்தகைய பங்களித்திருக்கிறார் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.