பெரம்பலூர் அருகே பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்து 9 பேர் காயம்
திருச்சி: பெரம்பலூர் அருகே தனியார் பேருந்தில் பெட்ரோல் வெடிகுண்டு வெடித்ததில் பயணிகள் 9 பேர் காயமடைந்தனர்.
பெரம்பலூரில் இருந்து 45 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு துறையூருக்கு சென்று கொண்டிருந்தது. ஈச்சம்பட்டி அருகே சென்றபோது, பேருந்தின் படிக்கட்டு அருகே பலத்த சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்தது.
இதில் படிக்கட்டு அருகே நின்றிருந்த 4 பயணிகளும், பேருந்துக்குள் இருந்த 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பெரம்பலூர் மற்றும் அம்மாபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சோனல் சந்ரா மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். சுதந்திர தினவிழாவை சீர்குலைப்பதற்காக திட்டமிட்டு குண்டு வெடிக்கச் செய்யப்பட்டதா? அல்லது வேறு எங்கும் எடுத்துச் சென்றபோது வெடித்ததா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.