குழந்தையை இழந்த பார்வையற்ற தம்பதிக்கு 9 ஆண்டுகளுக்கு பின் ரூ.3 லட்சம் இழப்பீடு
மதுரை: மதுரையில் 9 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையை பறிகொடுத்த பார்வையற்ற தம்பதிக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுபடி ரூபாய் 3 லட்சம் இழப்பீடு கிடைத்துள்ளது.
மதுரை அண்ணாநகரில் வசித்து வருபவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்கள் இரண்டு பேரும் பார்வையற்றவர்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மாரீஸ்வரிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை திருடப்பட்டு விட்டது.
இதைத் தொடர்ந்து குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரி மாரீஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியில் இருந்து மாரீஸ்வரிக்கு ரூபாய் 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வி.எஸ்.ரவி, எஸ்.நாகமுத்து ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 லட்ச ரூபாய்க்கான காசோலை அரசு சார்பில் முத்துமாணிக்கம் - மாரீஸ்வரி தம்பதிக்கு வழங்கப்பட்டது. இவ்வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு முத்துமாணிக்கம் - மாரீஸ்வரி தம்பதிக்கு இழப்பீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.