கோவையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி... 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவையில் ரத்த தான சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவை: கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரத்த தான சைக்கிள் பேரணி நடைபெற்றது.
வருகிற ஜூன் 14 ஆம் தேதி உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள அன்னை கரங்கள் நலசங்கம் சார்பில் இன்று ரத்த தான சைக்கிள் பேரணி நடைபெற்றது.
உலக ரத்ததான தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலேயே இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். இதனை வலியுறுத்தியே ரத்த தான தினத்தை முன்னிட்டு, இதற்காக உலகின் பல பகுதிகளில் பல்வேறு முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, கோவையில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட போக்குவரத்து ஆணையர் சுஜித்குமார் துவக்கி வைத்தார். நேரு விளையாட்டு அரங்கம் முதல் பாப்பநாயக்கன்பாளையம் வரை இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியில் சுமார் 500க்கும் மேற்போட்டோர் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த தானம் உயிர் தானம், தானங்களில் சிறந்தது ரத்த தானம், அனைவருக்கும் ரத்த தானம் செய்வோம் உயிரிழப்பை தவிர்ப்போம் என்ற பெயரில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.