ரத்தம் குடித்து அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது... திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி
திருவாரூர்: நள்ளிரவில் ஆடு, கோழிகளை கொன்று ரத்தம் குடித்து வந்த குரங்கை திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் பிடித்து கிராம மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளனர்.
திருவாரூர் அருகே எண்கண் என்ற கிராமத்தில், கடந்த சிலவாரங்களாக மர்ம விலங்கு ஒன்று அச்சுறுத்தி வந்தது. திடீர் திடீரென நாய், ஆடு, கோழிகள் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துகிடந்தன. மர்ம விலங்கு ஒன்று ஆடு, கோழிகளை கொன்று ரத்தம் குடித்தது கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஊர்மக்களை அச்சுறுத்திய அந்த விலங்கு ஒரு குரங்கு என பின்னர் தெரியவந்தது.
விலங்குகளை கடித்த குரங்கு திடீரென ஊரில் உள்ள பெண்களை துரத்தவும் தொடங்கியது. இதனையடுத்து கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட வனத்துறைக்கு புகார் அளிக்கவே, குரங்கிற்கு பிடித்தமான கோழி முட்டைகளை உடைத்து ஒரு தட்டில் ஊற்றி, பொது இடத்தில் வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். அப்போது எதிர்பார்த்தபடி வந்த குரங்கை லாகவமாக பிடித்தனர். தங்கள் கிராமத்தை பீதியில் ஆழ்த்திய குரங்கு பிடிபட்டதில் கிராம மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். குரங்கை பிடிக்கும் குழுவில் பணியாற்றிய வன ஊழியர்கள் செல்வம், கல்யாணம் உள்ளிட்டவர்களுக்கும் கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.
குரங்குகள் பழங்கள்தான் சாப்பிடும். ஆனால் இந்த குரங்கு ரத்தம் குடிக்கும் வகையயை சேர்ந்தது. இது எங்களுக்கே அதிர்ச்சியாதான் இருக்கு. பிடிபட்ட குரங்கை கொண்டு சென்று காட்டுப்பகுதியில் விட்டுவிடுவோம் என்றார் ரேஞ்சர் தனபாலன். திருவாரூர் மாவட்ட எல்லைக்குள் குரங்கு, பாம்பு தொல்லைகள் இருந்தால் மாவட்ட வன அலுவலகத்தை அணுகலாம். நேரிடையாக புகார் அளிக்க முடியவில்லையென்றால் 97892-75747 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்' என்றும் ரேஞ்சர் தனபாலன் கூறியுள்ளார்.