ரயிலில் ரூ. 5.75 கோடி பணம் கொள்ளை: பெட்டியில் கொள்ளையனின் ரத்தக்கறை சிக்கியது
சென்னை: ஓடும் ரயிலில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள தனிப்படை போலீசார், சேலம் முதல் சென்னை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த ரயில் பெட்டியில் கொள்ளையனின் ரத்தக்கறை படிந்துள்ளது. முக்கிய தடயமான இந்த ரத்தத்துளிகளை சேகரித்து போலீசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ரூ.342 கோடியில் ரூ.5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ரயில்வே பாதுகாப்பு படையினர் 10க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொள்ளை நடந்த ரயிலை தமிழக காவல் துறை தலைவர் அசோக்குமாரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். முதற்கட்ட விசாரணைளில் 4 பேர் கொண்ட கும்பல் பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
சேலத்தில் 7 மணி நேரம்
வங்கியிலிருந்து 226 பணப் பெட்டிகளும் சேலத்தில் நின்ற ரயில் பெட்டியில் நண்பகல் 2.30 மணிக்கே ரயிலில் ஏற்றப்பட்டுள்ளது. சுமார் 7மணி நேரம் பணம் நிறப்பப்பட்ட சிறப்பு பெட்டி, சேலம் ரயில் நிலையத்தில் இருந்துள்ளதால் அந்த நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சாதகமான ரயில் பாதை
சேலம் முதல் விருத்தாச்சலம் வரையிலான ரயில் பாதை மின்மயமாக்கப்படாதது என்பதால் அதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் மேற்கூறையில் துளையிட்டு கொள்ளையடித்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் வழக்கமாக 15 நிமிடங்கள் நிற்கவேண்டிய ரயில், பணத்துடன் வந்தபோது 26 நிமிடங்கள் நின்றது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதிகாலை 4 மணி
ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை எழும்பூருக்கு அதிகாலை 4 மணிக்கு வந்த ரயில் பெட்டி 11 மணிக்கு திறக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. எழும்பூர் ரயில்நிலையத்தில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்களா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
பெட்டியில் ரத்தக்கறை
இதனிடையே கொள்ளை நடந்த ரயில் பெட்டியில் கொள்ளையனின் ரத்தக்கறை படிந்துள்ளது. ரயில் பெட்டியின் மேற்கூரையில் துவாரம் போட்டு அதன் வழியாக கொள்ளையன் இறங்கும் போது துவாரத்தின் பக்கவாட்டு இரும்பு கம்பி குத்தி, கொள்ளையனுக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ரத்தக்கறை துகள்களை போலீசார் முக்கிய தடயமாக சேகரித்து சென்றனர்.
சிசிடிவி காட்சிகள்
சேலம் முதல் சென்னை வரை உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். விருத்தாச்சலம் ரயில் நிலையங்களில் பணம்அஇருந்த பெட்டிகளில் வென்டிலேட்டரை சிலர் திறக்க முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
உதவியது யார்?
விருத்தாச்சலம் ரயில் நிலையத்தில் கொள்ளை நடந்துள்ளதா அல்லது பணம் இருந்த ரயிலில் பயணிகள் போல் வந்தார்களா, வங்கி ஊழியர்கள் யாரேனும் அவர்களுக்கு உதவினார்களா என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.