டீன் ஏஜ் இளசுகளின் உயிருக்கு உலை வைக்கும் 'ப்ளூ வேல்' சைக்கோ கேம்...பெற்றோரே உஷார்
டீன் ஏஜ் சிறார்களின் உயிரை பறிக்கும் விபரீத ஆன்லைன் விளையாட்டு ப்ளூவேல் உங்கள் வீட்டிலும் நுழைந்து விட்டதா என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.
சென்னை : ப்ளூ வேல் என்ற உயிருக்கே உலை வைக்கும் ஆன்லைன் கேம் இந்தியாவிலும் நுழைந்து இளம் தலைமுறையினரை சைக்கோவாக்கி கடைசியில் தற்கொலைக்கும் தூண்டி வருகிறது, எனவே பெற்றோரே உஷாராக உங்களது பிள்ளைகளின் செயல்பாடுகளை கவனியுங்கள்.
மனித பயன்பாட்டிலுள்ள அசவுகரியங்களை களைவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டு வருகின்றன.
வெர்சுவல் என்ற ஒரு வார்த்தை நிஜ உலகில் இருக்கும் நல்ல விஷயங்களை அழித்துவிட்டன. ஆனால் இளம் தலைமுறையினரின் தொழில்நுட்ப அடிமை மோகம் அவர்களின் உயிரையும் பறிக்கும் என்பதற்கான உதாரணம் தான் படு பயங்கரமான ப்ளூவேல் ஆன்லைன் கேம்.
ப்ளூவேல் விளையாட்டு
ப்ளூவேல் கேம் செயலி போல பதிவிறக்கம் செய்து விளையாட முடியாது, ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியுமாம். விளையாட்டு தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள், இது உயிரோடு விளையாடும் விளையாட்டு. வித்தியாசம்,த்ரில் என்று சுற்றும் டீன்ஏஜ்களை குறி வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு ரஷ்யாவில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.
விபரீத விளையாட்டு
இந்த விளையாட்டில் இணையும் ப்ளேயருக்கு தொடர்ந்து 50 நாட்கள் அட்மினிஸ்ட்ரேட்டர் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பார். தொடக்கத்தில் அதிகாலையில் பேய் படம் பார்க்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, பயத்திலிருந்து வெளியே வா என்பது போன்ற டாஸ்க்குள் கொடுக்கப்பட்டு அவற்றை புகைப்படம் எடுத்து பதிவிடச் சொல்வார்களாம். பின்னர் கையை கத்தியால் வெட்டு, மேம்பாலத்தில் நுனிப் பகுதிக்குச் செல், நீ தான் ப்ளூ வேல் என்பது போல டினேஷ்களை தனிமைப்படுத்தி அவர்களை கிட்டதட்ட சைக்கோவாக்கி 50வது டாஸ்க்காக தற்கொலைக்கு தூண்டுவார்களாம்.
130 பேரை பலிவாங்கிய விளையாட்டு
2015 மற்றும் 2016 காலகட்டத்தில் இந்த விபரீத ஆன்லைன் விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் 130 இளம் சிறார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனா, பிரேசில், அர்ஜென்டினா என்று உலக நாடுகளைக் கடந்து இந்த விளையாட்டு இந்தியாவிலும் காலெடுத்து வைத்துவிட்டது என்பது மும்பையில் சமீபத்தில் நடந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
மும்பைச் சிறுவன் பலி
மும்பை, அந்தேரி பகுதியை சேர்ந்த, 14 வயது சிறுவன் மான்பிரீத் சிங் சகானி என்பவன், ஜூலை, 29ம் தேதி, ஏழாவது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான். அவன், புளூ வேல் கேமை விளையாடி தான் இந்த முடிவை எடுத்துள்ளான் என்ற அதிர்ச்சி தகவல் பரவி உள்ளது.
இன்ஸ்டாகிராமில் தற்கொலைப்படம்
மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்னர் அந்தச் சிறுவன் தான் தற்கொலை செய்து கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக போலீசாரின் முதல்கட்டத் தகவலில் தெரிய வந்துள்ளது. இந்த விளையாட்டு குறித்து ஒன்பதாவது வகுப்பு படித்து வந்த மான்பிரீத் தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்துள்ளான், ஆனால் அதனை அவர்கள் நம்பவில்லை.
உஷார் பெற்றோரே
நமக்கு கிடைத்த வசதி, வாய்ப்புகள் தன் பிள்ளைகளுக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று தொழில்நுட்ப கேட்ஜெட்டுகளை பரிசளிக்கும் பெற்றோரே உஷாராக இருங்கள். உங்கள் பிள்ளைகள் சரியான வழியில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமையும் உங்களுக்கு உள்ளது.
தடை செய்ய வேண்டும்
எனினும் படு பாதகமான இந்த ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய மத்திய அரசின் நடவடிக்கை தேவை என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர். மகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ்,"ப்ளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டாக உள்ளது. இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.