என்ட்ரி மட்டும் தான் எக்ஸிட் கிடையாது... ஆளை விழுங்கும் ப்ளூவேல் விளையாட்டு... யார் குற்றவாளி?
இளைஞர்களை காவு வாங்கும் ப்ளூவேல் கேம் ஒரு முறை உள்ளே போய்விட்டால் பிறகு வெளியே வரவே முடியாது என்பது இந்த மூளையை மழுக்கும் விளையாட்டின் சூத்திரம்.
சென்னை : உயிரை பறிக்கும் ப்ளூவேல் இணையதள விளையாட்டிற்குள் ஒரு முறை சென்றுவிட்டால், கவனிப்பார் இல்லையென்றால் அதில் இருந்து விடுபடமுடியாத அளவிற்கு மரணம் வரை கொண்டு போய்விட்டு விடும் என்பது தான் விக்னேஷின் மரணம் நமக்கு உணர்த்தும் செய்தி.
தொழில்நுட்பம் என்பது அறிவார்ந்த வளர்ச்சிக்காக கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் சில மோசமான விளைவுகளையும் அது ஏற்படுத்தும் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறது, ப்ளூ வேல் என்னும் கொடூர அரக்கன் விளையாட்டு. இளைஞர்களை குறி வைக்கும் இந்த விளையாட்டிற்கு பலர் பலியாகியுள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒரு உயிரை காவு வாங்கியுள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்யாவில் தொடங்கிய இந்த சைக்கோ விளையாட்டு மும்பையில் ஒரு சிறுவனின் உயிரை முதல் பலி வாங்கியது. தொடர்ந்து அண்டை மாநிலமான கேரளாவில் ஒரு மாணவனின் உயிரை பறித்தது. இதனால் பதறிய கேரளா அரசு இதற்கு தடை கோரியது. எந்தப் பிரச்னையுமே நமக்கு வரும் வரை அந்த விஷயத்தின் தீவிரம் நமக்கு தெரியாது என்பதை உணர்த்தியுள்ளது இந்த ப்ளூ விளையாட்டும்.
மீள முடியாத விளையாட்டு
ஆன்லைனில் மட்டுமே விளையாடப்படும் இந்த விளையாட்டிற்குள் ஒரு முறை சென்றுவிட்டால், அதிலிருந்து மீள்வது என்பது மிகவும் கடினம் தான். எப்போதும் செல்போன், லேப்டாப் என்று மூழ்கியிருக்கும் இளைஞர்கள் எதேச்சையாகவோ அல்லது தெரிந்தோவா ஒரு முறை இந்த திமிங்கலத்தின் வாயில் விழுந்து விட்டால் அவ்வளவு தான், ஆளை விழுங்காமல் விடாது.
சைக்கோ விளையாட்டு
வித்தியாசமான டாஸ்க்குகளை கொடுக்கிறேன் என்ற பெயரில் இளைஞர்களின் மனநிலையை கொடூரம், கொலை, தற்கொலை என்று பாதை மாற்றுவது தான் இந்த விளையாட்டு. முதலில் கையை அறுத்துக்கொள், ரயில் தண்டவாளத்தில் போய் நில், அதிகாலையில் பேய் படம் பார் என்று டாஸ்குகள் கொடுக்கப்படுமாம்.
கண்டபிடிப்பது கடினம்
ஒரு அட்மின் உலகின் எங்கிருந்து வேண்டுமானால் இந்த டாஸ்க்கை கொடுக்கலாம். அது யார் என்பதை கண்டறிவது மிகக் கடினமான விஷயம். அதே போன்று ப்ளூவேல் விளையாட்டில் என்ட்ரி மட்டுமே எக்சிட் கிடையாது. ஒவ்வொரு டாஸ்க் முடித்த பின்னரும், நீ தோல்வியடைந்துவிட்டாய் என்று சொல்லியே இறுதிக் கட்டமான தற்கொலைக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் இளைஞர்களை கொண்டு செல்கிறார் என்பதும் மற்றொரு திடுக் தகவல்.
யார் மீது வழக்கு போடுவது?
இணையம் என்னும் பெருவலையில் சிக்கி மறைந்திருக்கும் இந்த ப்ளூவேலை கட்டுப்பட்டுத்துவதும் சற்று சவாலான விஷயம் தான். விக்னேஷ் வழக்கிலும் கூட தற்கொலை என்ற பிரிவின் கீழ் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இவருக்கு டாஸ்க்குகளை கொடுத்த அட்மின் யார் என்பதை கண்டுபிடிப்பது என்பது சைபர் கிரைம் போலீசாருக்கு சற்று கடினமான விஷயம் தான். ஒரு வேளை விக்னேஷ் ப்ளூவேல் விளையாட்டால் தான் உயிரிழந்தான் என்றாலும் யார் மீது வழக்கு போடுவது என்ற கேள்வியும் இதில் தொக்கி நிற்கிறது.
தடை விதிக்க முடியுமா?
இந்த ஆன்லைன் விளையாட்டை எப்படி தடை செய்வது என்பதிலும் தெளிவான பதில் இல்லை என்று தான் சொல்ல முடியும். கேரளா, மஹாராஷ்ட்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகத்திற்கு ப்ளூ வேல் விளையாட்டை தடை செய்ய கோரிக்கை விடுத்தன. இதற்கு தகவல் தொழில்நுட்பத்துறை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமூக வலைதளங்கள் மூலமே இந்த விளையாட்டு பரவுவதால், டுவிட்டர், முகநூல் உள்ளிட்டவற்றில் இருந்து ப்ளூவேல் விளையாட்டிற்கான லிங்ககை டெலிட் செய்ய அறிவுறுத்தியுள்ளது.
விழிப்போடு இருங்கள்
ஆனால் இந்த நடவடிக்கை மட்டுமே இந்த விளையாட்டை தடை செய்ய போதுமானதா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. எனினும் இந்த விஷயத்தில் யாரையும் குற்றம் சொல்லாமல் நாம் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பரபரப்பான வாழ்க்கை முறையில் காலத்திற்கேற்ப நாம் மாறினாலும், குழந்தைகளின் செயல்பாடுகளை பெற்றோரை விட அதிகம் யாராலும் கண்காணித்து விட முடியாது. எனவே பெற்றோர், நண்பர்கள் விழிப்புடன் இருந்தால் எதிர்காலத்தில் இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்பதே அதிகாரிகளின் கோரிக்கையாக உள்ளது.