ரூ.77 லட்சம் செலவில் புதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி படகு குழாம் - மக்கள் மகிழ்ச்சி
தூத்துக்குடி படகுதுறையை ரூ.77 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கிடப்பில் கிடந்த படகு குழாம் மீண்டும் புத்தூயிர் பெற்று வருவது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் வெள்ளி விழா கொண்டாடத்தை முன்னிட்டு மாவட்டத்தை அழகு படுத்தும் விதமாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் அசிஷ்குமார் பல திட்டங்களை கொண்டு வந்தார்.
அதில் ஓன்றுதான் மத்திய கடல் வள ஆராய்ச்சி நிலையம் எதிரே துறைமுகத்திற்கு சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவில் படகு குழாம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணிக்காக ரூ.1 கோடி செலவிடப்பட்டது. மேலும் ரூ.75 ஆயிரம் மதிப்பில் 7 படகுகளும் வாங்கப்பட்டன.
ஆனால் பணி தொடங்கிய சில நாட்களில் சிறிய பிளாட்பாரம் மட்டுமே கட்டப்பட்டு, அந்த பணி அப்படியே கிடப்பில் போடப்பட்டது. படகு குழாமிற்கு வாங்கப்பட்ட படகுகள் பழைய விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டு தற்போது உருகுலைந்து காணப்படுகிறது. எனவே படகு குழாம் திட்டம் மீண்டும் துவங்க சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து ரூ.77 லட்சம் மதிப்பில் மீண்டும் படகு துறையை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. துறைமுக சமுதாய வளர்ச்சி நிதி கிடைத்தவுடன் படகு குழாம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்றுள்ளனர்.