மக்களே என்ஜாய்.. குற்றாலத்தில் தொடங்கியது படகுசவாரி.. அமைச்சர் ராஜலட்சுமி துவக்கினார்
குற்றாலத்தில் படகு சவாரி இன்று தொடங்கியது.
குற்றாலம்: குற்றாலம் ஐந்தருவி சாலையில் கீழவெண்ணமடைக்குளத்தில் இன்று படகு சவாரி துவங்கப்பட்டது. இந்த படகு சவாரியினை அமைச்சர் ராஜலட்சுமி தொடக்கி வைத்தார்.
இந்தியாவில் அருவிகளின் நகரமாக விளங்குவது குற்றாலம். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிறைந்து காணப்படும் சுமார் 2600 வகை மூலிகைகளின் மீது பட்டு தவழ்ந்து வந்து இந்த குற்றால நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது கண்களுக்கு விருந்தாவதுடன், இந்த அருவி நீரில் குளித்தால் சரும நோய்கள் குணமாகும் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் சீசனில் குவியத் தொடங்குவர்.
அத்துடன் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து குற்றாலத்தில் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளி்ட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
சீசனும் அருமையாக உள்ளது. இந்நிலையில் இன்று படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. குற்றாலம்- ஐந்தருவி சாலையில் தமிழ்நாடு ஹோட்டல் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் இந்த படகு சவாரி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான படகு சவாரியை அமைச்சர் ராஜலட்சுமி குற்றாலம் ஐந்தருவி சாலையில் கீழவெண்ணமடைக்குளத்தில் துவக்கி வைத்தார். இதில் விதவிதமான படகுகளில் சென்று சுற்றுலாப் பயணிகள் மகிழ்ந்தனர்.