ஒகேனக்கல் ஆற்றில் திண்பண்டங்களுடன் நடமாடும் பரிசல் கடைகள்-சுற்றுலா பயணிகள் வரவேற்பு
தருமபுரி: ஒகேனக்கல்லில் பரிசலில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்காக ஆற்றில் நடமாடும் பரிசல் கடைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பெருமளவு மக்கள் சுற்றுலா பயணங்களில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தருமபுரிமாவட்டம் ஒகேனக்கல்லில் தற்போது ஏராளமான சுற்றுலாபயணிகள் குவிந்து வருகின்றனர்.
அவர்கள் அருவியில் குளித்தும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பரிசலில் சென்றும் மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக, ஒகேனக்கல் ஆற்றில் நடமாடும் பரிசல் கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த கடைகளில் ஏராளமான தின்பண்டங்கள், தண்ணீர் பாட்டில்கள், சிறுபிள்ளைகள் விரும்பி சாப்பிட கூடிய பொருட்கள் என காணப்படுகின்றன. மேலும் அனைத்து தலங்களையும் பரிசலில் சென்று பார்த்துவர ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது என்பதால் பயணிகளுக்காக ஆற்றிலேயே இந்த பரிசல் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளிடையே இந்த கடைகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.