ஏரியில வீடு கட்டுனா மழை காலத்தில இப்படி 'போட்'லதான் போகணும்
சென்னை: கொட்டி வரும் கனமழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. பொதுமக்கள் தாங்க முடியாத துயரத்திற்குள்ளாகியிருக்கிறார்கள். மழை நீரில் ஏராளமான வீடுகள் முழ்கியுள்ளன. நகரில் தண்ணீரில் பரிதவிக்கும் மக்களை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளால் இன்று தண்ணீர் முழுவதும் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாகவே சென்னை சாலைகளில் படகுகள் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
|
மிதக்கும் வீடுகள்
சென்னையில் கடந்த 24 மணிநேரமாக பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 20 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கிறது. பல லட்சம் மக்கள் இதனால் உணவு, உடைகள், மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
சூழ்ந்த வெள்ளம்
திரும்பிய திசை எல்லாம் மழை நீர் வடிய இடமின்றி சூழ்ந்தது. சாலைகள் மற்றும் தெருக்களில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், சூளை டிமெல்லோஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, வில்லிவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், ஓட்டேரி, பெரம்பூர், வியாசர்பாடி, அடையாறு, தேனாம்பேட்டை, எழும்பூர், பிராட்வே, வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் வடிய இடமின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கியது.
|
தீயணைப்புத்துறையினர் மீட்பு
கனமழையால், புறநகரில் உள்ள, 92 ஏரிகளில், 75 ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம் ஏரிகள் நிரம்பி உபரி நீர், முடிச்சூரை அடுத்த வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயப்பா நகர், பி.டி.சி., குடியிருப்பு, பரத்வாஜ் நகர் பகுதிகளை சூழ்ந்துள்ளது. பி.டி.சி., குடியிருப்பு, பரத்வாஜ் நகரில் வாடகை வீட்டில் வசிப்போர், தங்கள் விடுகளை பூட்டி விட்டு, உறவினர் வீடுகளுக்கு சென்றனர்; சிலர், அருகேயுள்ள தனியார் பள்ளியில் தஞ்சமடைந்து உள்ளனர். ராயப்பா நகரில் குடியிருப்புகளை சுற்றி, 5 அடி ஆழத்திற்கு மழைநீர் தேங்கியுள்ளது. பகுதிவாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். தாம்பரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு படையினர், வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை, படகுகள் மூலம் மீட்டனர்.
புறநகரில் வெள்ளநீர்
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் முற்றிலும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழைநீரில் சிக்கி தவித்த மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மகாலட்சுமி நகரில் இருந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி சாலையில் பொதுமக்களை மீட்டு படகு மூலம் மீட்டனர்.
|
வடிகால் வசதியில்லை
சென்னையின் நகர் பகுதியில் இடமில்லாத காரணத்தால் புறநகர் பகுதிகளில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சரியான திட்டமிடல் இல்லாமலும் வடிகால் வசதியின்றியும் வீடுகள் கட்டப்பட்டுள்ள காரணத்தினலேயே மழை நீர் அனைத்தும் குடியிருப்பு களை சூழ்ந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிமெண்ட் சாலைகள்
இதேபோல நகரின் பல பகுதிகளிலும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் உறிஞ்சப்படாமல் வெள்ளமாக தேங்கியுள்ளன. மேலும் சாலைகள் மேடாகவும், வீடுகள் தாழ்வாகவும் மாறியதால் நகரின் பலபகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் அதிகாரிகள் சரியாக திட்டமிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.