காதலுக்கு எதிர்ப்பு... திருப்பரங்குன்றத்தில் ரயில்முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
சென்னை: காதலுக்கு வீட்டில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திருப்பரங்குன்றம் அருகே ரயிலில் பாய்ந்து இளம் காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மூலக்கரை சுரங்கப்பாதை அருகே ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் உடல் சிதறிக் கிடந்தது. இதுகுறித்து அவ்வழியே சென்ற ரயில் ஓட்டுனர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் வந்தனர். அங்கு தலை இல்லாத நிலையில் இரு உடல்கள் கிடந்தன.
தலைப் பகுதியை தேடியபோது அது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மூட்டாகாலனி அருகே இரு உடல்களின் தலைகளும் கிடந்துள்ளன. இரு உடல்களையும் மீட்டு போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டவர்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுரை புதூரை அடுத்த ஆத்திகுளம் யமுனா தெருவைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மகன் கார்த்திக். மதுரை கள்ளந்திரியை அடுத்த ஆமந்தூர்பட்டியைச் சேர்ந்த அழகு மகள் புனிதா என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் கணினி பிரிவில் பணிபுரிந்தார்களாம். இருவரும் காதலித்த வந்த நிலையில் இருவீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த காதலர்கள் செவ்வாய்கிழமை இருவரும் திருப்பரங்குன்றத்தில் அதிகாலையில் அவ்வழியே சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து மதுரை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.