பெசண்ட் நகர் மின்மயானத்தில் சோ ராமசாமியின் உடல் தகனம்... வைகோ, இல.கணேசன் இறுதி அஞ்சலி
துக்ளக் பத்திரிகையாளர் சோ ராமசாமியின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சென்னை: உடல் நலக் குறைவால் இன்று அதிகாலை அப்போலோ மருத்துவமனையில் காலமான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமியின் உடல் பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ராஜ்ய சபா எம்பி இல.கணேசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமாகா தலைவர் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 29ம் தேதி துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சோவின் உயிர் பிரிந்தது.
இதனையடுத்து, அவரது உடல் எம்ஆர்சி நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், திரைத் துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணியளவில் அவருடை இறுதி ஊர்வலம் எம்ஆர்சி நகரில் இருந்து புறப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ராஜ்ய சபா எம்பி இல கணேசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அதே போன்று நடிகர்கள் நாசர், விஷால், பொன் வண்ணன், கார்த்தி, ஒய். ஜி. மகேந்திரன் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறையினர் கலந்து கொண்டனர். சோவின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், பெசண்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது. பின்னர், மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.