கிணற்றில் குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை... அஜாக்கிரதையாக இருந்த 4 சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
வேலூர்: வேலூர் சிறையில் கிணற்றில் குதித்து கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அஜாக்கிரதையாக செயல்பட்டதாக நான்கு சிறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). கடந்த 2012ம் ஆண்டு மனைவியைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்ற மணிகண்டன், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சிறைக்குள் இருந்த மணிகண்டனை திடீரெனக் காணவில்லை. அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் சிறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறை வளாகத்தில் இருந்த கிணற்றில் மணிகண்டனின் உடல் மிதப்பது கண்டுபிடிக்கப் பட்டது. மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, அஜாக்கிரதையாக பணியாற்றியதாக துணை ஜெயிலர் காளிதாஸ், உதவி ஜெயிலர் சர்தார்பாஷா, முதன்மை தலைமை வார்டன் நீலகண்டன், தலைமை வார்டன் தங்கமுத்து ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் கருப்பண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று காலை மாஜிஸ்திரேட் மும்மூர்த்தி வேலூர் மத்தியசிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மணிகண்டனின் உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
சடலத்தை பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் முன்வராததால் வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.