காணாமல்போன பாம்பன் மீனவர் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியது!
ராமேஸ்வரம்: காணாமல்போன பாம்பன் மீனவர் உடல் இலங்கையில் கரை ஒதுங்கி உள்ளது. அவரது உடலை மீட்க அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி பாம்பனை சேர்ந்த ஜான் கென்னடி என்பவரது படகில், ஜான் கென்னடி அவருடைய மகன் வில்சன் மற்றும் எஸ்ரோன், டெரிக் ஆகிய 4 பேரும் மீன்பிடிக்க சென்றனர்.
மண்டபம் கோயில்வாடி கடற்கரை பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இவர்கள், மறுநாள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அன்று மாலை வரை அவர்கள் கரை திரும்பாததால், காணாமல் போன மீனவர்களை தேடி மாற்று படகுகளில் கடலுக்கு மீனவர்கள் சென்றனர்.
இரு நாட்களுக்கு பிறகு கடலில் மிதந்து கொண்டிருந்த ஜான் கென்னடி உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்ற மூன்று மீனவர்களின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து, காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தர கோரி பாம்பனில் மீனவர்களின் உறவினர்கள் தொடர் உண்ணாவிரதம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், 17 நாட்களுக்கு பின்னர் காணாமல் போன மீனவர் எஸ்ரோன் உடல் இலங்கை யாழ்ப்பாணம் அருகே உள்ள ஊர்காவல்துறை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள எஸ்ரோவின் உடலை மீட்டுத்தர கோரி அவரது உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இவர் தவிர மற்ற இரண்டு மீனவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை.