கொதிகலன் கோளாறு.. வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
சென்னை: வட சென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுதடைந்துள்ளதால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ளது வடசென்னை அனல் மின்நிலையம். இங்கு நாள் ஒன்றுக்கு 1830 மெகாவட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு 5 அலகுகள் உள்ளன. அவற்றில் முதல் 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள 2 அலகுகளில் தலா 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில், 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அலகின் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குறிப்பிட்ட அலகின் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
கொதிகலன் குழாயின் பழுது நீக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விரைவில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.