சுபாஷ் பண்ணையார் கோஷ்டி மீது வெடிகுண்டு வீசிய 4 பேர் சரண்.
திண்டுக்கல், நந்தவனப்பட்டியில் கடந்த 2011, ஜனவரி 10ம் தேதி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத்தலைவர் பசுபதிபாண்டியன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த 16ம் தேதி விசாரணைக்காக சுபாஷ் பண்ணையாரை தவிர 13 பேர் ஆஜராகி விட்டு கார்களில் தூத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைரோடு அருகே வரும் போது 25 பேர் கொண்ட கும்பல், கார்கள் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்கியது. வெடிகுண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததால் 13 பேரும் காயமின்றி தப்பினர்.
இது தொடர்பாக நெல்லை அருகே ராமையன்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் (19) என்ற கோடி, மேலக்கடை விஜயபாண்டி (23) என்ற கவுசிபாண்டியன், தச்சநல்லூரை சேர்ந்த எஸ்டேட் மணி (30) ஆகிய 3 பேரை போலீசார் கன்னிவாடி அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பசுபதிபாண்டியன் கொலைக்கு பழிக்கு பழி வாங்க சுபாஷ்பண்ணையார் கோஷ்டியை சேர்ந்தவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது தெரியவந்தது.
இந்நிலையில் வெடிகுண்டு வீசியது தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர் (28), மதுரை திருவேங்கடத்தை சேர்ந்த ராஜா (28), திண்டுக்கல் ஒட்டுப்பட்டி ஜெகவீரன் (25), தென்காசி நன்னகரம் கனி (28) ஆகிய 4 பேர் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஜெகதீஸ்வரி உத்தரவிட்டார்.