வந்தவாசி கோயில் வளாகத்தில் வெடிகுண்டு.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்!
ஆலய வளாகத்தில் வெடிக்காத நிலையில் நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
வந்தவாசி: வந்தவாசி ரெங்கநாதர் கோயிலில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் பழமை வாய்ந்த ஸ்ரீ ரங்கநாதர் ஆலயம் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில், பிரகாரத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஒரு மூதாட்டி காலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது உருண்டையாக சணலும் திரியும் சுற்றப்பட்ட ஒரு பொருள் கீழே கிடந்ததை கண்டார். அதை எடுத்து ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அவர் வேலையை தொடர்ந்தார்.
திடீரென்று அந்த உருண்டை வடிவ பொருளிலிருந்து வெடிமருந்துகள் கொட்ட ஆரம்பித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் அலறி அடித்து கோயிலிலிருந்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், மர்மபொருளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் சக்திவாய்ந்த நாட்டு வெடிமருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வெடிக்காத நிலையில் கிடந்த மர்மபொருளை போலீசார் ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.
தொடர்ந்து, வெடிகுண்டினை கோயிலுக்குள் வீசியவர் யார்? நாசவேலைகளுக்காக வெடிமருந்து நிரப்பப்பட்டதா? என்பன குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.