சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவிற்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என்று தகவல்
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிகவளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். 2 மணிநேரம் நடந்த தேடுதல் வேட்டையில் எதுவும் சிக்கவில்லை.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், 10.30 மணிக்கு குண்டு வெடிக்கும் என மர்மநபர் ஒருவர் போலீஸ் கட்டுப்பாடு அறைக்கு போனில் மிரட்டல் விடுத்தார்.
இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் இருந்து வாடிக்கையாளர்கள்,ஊழியர்களும், பொதுமக்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த தியேட்டரில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டது.
மோப்பநாய்களுடன் அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர். வணிகவளாகத்திற்கு வெளியே நின்று கொண்டு வேடிக்கை பார்த்தனர். இதனால் ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரண்டு மணிநேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளிதான் என்று மாநகர காவல்துறை ஆணையர் திரிபாதி தெரிவித்தார்.
இதையடுத்து எக்ஸ்பிரஸ் அவென்யூ ஊழியர்களும் அங்கிருந்த பொதுமக்களும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.