சரவணா ஸ்டோர் கடையை பதறவைத்த வெடிகுண்டு புரளி - பீதியான தி. நகர் ரங்கநாதன் தெரு
சென்னை தி நகர் சரவணா ஸ்டோர்ஸுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் கடையில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் அது வெறும் புரளி என்று தகவல் வெளியானதால் பணியாளர்கள் நிம்மதியடைந்தனர்.
ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இங்கு எந்த நேரத்திலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஏராளமானோர் துணி மணி வாங்குவது என ஷாப்பிங் செய்த வண்ணம் இருப்பர்.
இந்த தெருவும் எந்நேரமும் கூட்டநெரிசலாகவே இருக்கும். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம்.
ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் கடையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து அவசர அவசரமாக பொருட்களை வாங்க வந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு கடையில் சோதனை நடைபெற்றதால் ரங்கநாதன் தெருவே பரபரப்படைந்தது. ஒருமணிநேரம் நடந்த சோதனையில் வெடிகுண்டு இல்லை என்று தெரியவந்தது. வெடிகுண்டு இருப்பதாக கூறியது வெறும் புரளிதான் என்று தகவல் வெளியாகவே வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் நிம்மதியடைந்தனர்.