எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்.. கடலூர் ஆசாமிக்கு வலை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மதியம் தொடர்பு கொண்ட ஒரு நபர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு வைக்க உள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். போன் மிரட்டலை அடுத்து வெடிகுண்டு பிரிவு அதிகாரிகள், முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸாரின் முதல்வரின் வீட்டில் சோதனையிட்டனர். கடைசியில் அது புரளி என்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று மாலையில், மீண்டும் கட்டுப்பாட்டு அறைக்கு, அதே எண்ணிலிருந்து அழைத்த மர்ம நபர், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு வைக்கப் போவதாகக் கூறி, இணைப்பு துண்டித்து விட்டார்.
ஒரே எண்ணில் இருந்து இந்த அழைப்புகள் வந்ததால், அது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அந்த தொலைபேசி அழைப்புகள் கடலூரிலிருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மிரட்டல் விடுத்த அந்த நபரை தேடி வருகின்றனர்.