வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: சென்னையில் 5 பள்ளிகளை முற்றுகையிட்ட பெற்றோர்
சென்னை: வளசரவாக்கத்தில் உள்ள 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் வட சென்னையில் உள்ள 5 பள்ளிகளை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு திங்கட்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த தகவல் காட்டுத் தீயாக பரவியதால் பெற்றோர் பீதி அடைந்தனர். தொலைக்காட்சிகளிலும் வளசரவாக்கம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் என்று செய்திகள் வந்தது.
இதை பார்த்த பெற்றோர்கள் எங்கே தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளிலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதோ என்று அஞ்சினர். உடனே தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
சென்னை வடபழனியில் உள்ள 1 பள்ளி, கொருக்குப்பேட்டையில் உள்ள 4 தனியார் பள்ளிகளுக்கும் பெற்றோர் படையெடுத்து அவற்றை முற்றுகையிட்டனர். தங்கள் குழந்தைகளை உடனே வீட்டுக்கு அனுப்புமாறு கூறி அழைத்தும் சென்றுவிட்டனர்.
இவ்வாறு பெற்றோர்கள் திடீர் என்று பள்ளிகளை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.