வெடிகுண்டு மிரட்டல்: சென்னை வணிக வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களுக்கு தீபாவளி வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள உளவு பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இ-மெயில் ஒன்று வந்தது. அதில், சென்னையில் உள்ள முக்கிய வணிக வளாகங்களான ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஆகியவற்றில் 3 தினங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. விசாரணையில் இந்த இ-மெயில் தாய்லாந்தில் இருந்து வந்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அந்த வணிக வளாகங்களில் சோதனை செய்தனர். அதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து சென்னையில் உள்ள வணிக வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்கை வாக், ஸ்பென்சர் பிளாசா, எக்ஸ்பிரஸ் அவென்யூ, சிட்டி சென்டர், அல்சா மால் உள்பட 16 பெரிய மற்றும் சிறிய வணிக வளாகங்களுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வணிக வளாகங்களில் ஏற்கனவே தனியார் நிறுவன பாதுகாவலர்கள் உள்ளனர். கூடுதலாக போலீஸ் மற்றும் அதிரடிப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும். என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.