4 எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல்… ‘வார்னிங்’ கொடுத்த ரயில்வே ஊழியர் கைது
நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களில் வெடிகுண்டு வைக்கப் போவதாக ரயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் கடிதத்தை மாவோயிஸ்டுகள் அனுப்பியுள்ளனர். இதனால் சென்னையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சென்னை: நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களை தகர்க்கப் போவதாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரிக்கு மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. இது மாவோயிஸ்டுகள் அனுப்பிய கடிதம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
அந்த மிரட்டல் கடிதத்தில் நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ், முத்து நகர் எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி நெல்லை ரயில்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், நீலகிரி, மங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்களும் அரக்கோணம் அருகில் வெடி வைத்து தகர்க்கப்படும் என்றும், தூத்துக்குடி நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மேல்மருவத்தூர் அருகில் தகர்க்கப் போவதாகவும் அந்த மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
செல்போன் எண்கள்
இதுதவிர, மிரட்டல் கடிதத்தில் 9 செல்போன் எண்களை குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செல்போன் எண்கள் யாருடையவை என போலீசார் தீவிர விசாரணை நடத்தினார். இதனால், ரயில் நிலையங்கள் முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கைது
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன்களை ஆய்வு செய்த போது மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அதன் அடிப்படையில் மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் ஊழியர்
திருத்தணியைச் சேர்ந்த கங்காதரன் என்பவர்தான் இந்த மிரட்டல் கடிதத்தை எழுதியுள்ளார். ரயில்வேயின் முன்னாள் ஊழியரான இவர் ஏற்கனவே 2011ம் ஆண்டு இதே போன்று ஒரு வெடிகுண்டு மிரட்டல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் என்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
விசாரணை
விசாரணையில், உறவினர்களை பழிவாங்க இதுபோன்று செய்ததாக போலீசாரிடம் கங்காதரன் கூறியுள்ளார். யார் யாரை பழிவாங்க நினைத்தாரோ அவர்களின் செல்போன் எண்களைத்தான் கடிதத்தில் கங்காதரன் குறிப்பிட்டிருக்கிறார். செல்போன் எண்களுக்கு உரியவர்கள், மாவோயிஸ்டுகள் என்று போலீசார் கைது செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்தே அவர் இப்படி செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.