வயலில் வந்து விழுந்து வெடித்த குண்டு.. விவசாயிகள் ஓட்டம்... செங்கல்பட்டு அருகே பரபரப்பு!
துப்பாக்கி சுடும் மையத்திலிருந்து வயலில் வெடிகுண்டு விழுந்து வெடித்தது.
Recommended Video
செங்கல்பட்டு: ராணுவ பயிற்சி முகாமிலிருந்து, விவசாய நிலத்தில் வெடிகுண்டு ஒன்று தவறி விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கிருந்த விவசாயிகள் அலறியடித்து கொண்டு ஓடினர்.
செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி முகாமில் இருந்து குறி தவறி விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு விழுந்து வெடித்தது. அப்பகுதியில் இருந்த விவசாயிகள் அலறியடித்து ஓடினர்.
செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரம் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த பகுதியில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை துப்பாக்கி பயிற்சி நடைபெறும். இதில் மத்திய, மாநில அரசு உயர் போலீஸ் அதிகாரிகள், ராணுவத்தினர் என ஏராளமானோர் ஈடுபடுவார்கள். அப்போது அவர்களது துப்பாக்கி சத்தம், பக்கத்திலுள்ள அஞ்சியூர், தென்மேல்பாக்கம், போன்ற இடங்கள் வரை கேட்கும்,
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில், இதே போல் துப்பாக்கி சுடும் பயிற்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது வழக்கமாக வெடிக்கப்படும் வெடிகுண்டுகளில் ஒன்று, குறி தவறி அருகிலிருந்த விவசாய நிலத்தில் விழுந்து டமார் என பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தத்தை கேட்ட அங்கு வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு பீதியில் தலைதெறிக்க ஓடினர். மேலும் அதே பகுதியில் புற்களை மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும், மாடுகளும் பயத்தில் சிதறி ஓடின.
அந்த வெடிகுண்டு சுமார் 2 கிலோ எடை இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து அனுமந்தபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவ வீரர்கள், வெடிகுண்டு இடத்தையும், வெடித்து சிதறிய வெடிகுண்டையும் ஆய்வு செய்தனர். அதில் வெடிக்காத நிலையில் மீதமிருந்த வெடிகுண்டினை செயலிழக்க செய்தனர்.
இது குறித்து மறைமலை நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அடிக்கடி இதுபோன்ற வெடிகுண்டுகள் விவசாய நிலங்களில் விழும்போது தங்களுக்கு ஒருவிதஅச்சம் ஏற்படுவதாகவும், சில நேரங்களில் கால்நடைகள் மீது வெடிகுண்டுகள் சிதறி அவை உயிரிழந்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.