நாளையுடன் முடிவடைகிறது இந்த வருட “புத்தக கண்காட்சி” – இதுவரை 6 லட்சம் பேர் பார்வை!
சென்னை: சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நாளையுடன் முடிவுறும் நிலையில் இதுவரை 6 லட்சம் பேர் புத்தக் கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளதாக கூறப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டிற்கான சென்னை புத்தக கண்காட்சி கடந்த 9 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. 700 அரங்குகள் கொண்ட இந்த புத்தக கண்காட்சியில் அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவம், கவிதை, புதினம், இலக்கியம், சிறுவர் விரும்பும் சித்திர கதைகள் போன்ற பல்சுவை கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது.
புத்தக கண்காட்சியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கொள்ளை கொண்ட புத்தக திருவிழா நாளை நிறைவு பெறுகிறது.
இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் கே.எஸ்.புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், "புத்தக கண்காட்சிக்கு இதுவரை 6 லட்சம் மக்கள் வந்துள்ளனர். தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சினிமா, அரசியல், அறிவியல், வரலாறு, சமையல், ஜோதிடம், மொழியியல், குழந்தை இலக்கியம் போன்ற தலைப்பிலான நூல்களும், படிப்பிற்கு உதவும் குறுந்தகடுகளும் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது.
மத்திய, மாநில அரசு நிறுவனங்களின் அரங்குகளும், கல்வெட்டு பதிப்பு சார்ந்த ஒரு அரங்கும், பிரெய்லி நூல்கள் உள்ள ஒரு அரங்கும், ஜப்பானிய நிறுவனத்தின் ஒரு அரங்கும், மலையாளம், உருது மொழி நூல்கள் கொண்ட அரங்குகளும், பல மல்ட்டிமீடியா துறை சார்ந்த அரங்குகளும் இந்த முறை இடம் பெற்றிருப்பது சிறப்புக்குரியது.
புத்தக கண்காட்சி 21 ஆம் தேதியன்று முடிவடைகிறது. எனவே இந்த புத்தக கண்காட்சிக்கு இதுவரை வராதவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.