கட்டபொம்மன் நினைவிடத்தில் மணி மண்டபம் – பூமி பூஜையுடன் தொடங்கியது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்க பூமி பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
சுதந்திர போராட்டத்திற்கு குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரில் தூக்கிலிட்டனர். அங்குள்ள அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புதிய மணி மண்டபம் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மணி மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. இதில் கலெக்டர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நினைவு மண்டபம் மொத்தம் 5 தளங்களுடன் முழுவதும் கருங்கற்களை கொண்டு கட்டப்படுகிறது. தரை தளத்தில் கட்டபொம்மனின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படுகிறது. 1 மற்றும் 2வது தளத்தில் கட்டபொம்மனின் வரலாற்று சிறப்புகள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட உள்ளது. 7 மாதத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து திறப்பு விழா நடத்த திட்டமிட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் ஞானகுரு, உதவி பொறியாளர் துரைசிங்கம், கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை நிறுவனர் குட்டி, கட்டபொம்மன் பண்பாட்டு கழகம், வீரசக்கதேவி ஆலயக்குழு, நம் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.