திருத்தணியில் பிரசவத்தின் போது கவனக்குறைவால் பச்சிளம் குழந்தையின் காலை உடைத்த டாக்டர்!
திருத்தணியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தையின் காலை டாக்டர் உடைத்துள்ளார்.
திருத்தணி: திருத்தணியில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது பச்சிளம் குழந்தையின் காலை டாக்டர் உடைத்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணியில் வசித்து வரும் ரமேஷ் என்பவரின் மனைவி பிரியா. கர்ப்பிணியான இவர், கடந்த 19ம் தேதி திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டுள்ளார். 20 தேதியும் பிரசவ வலி காணாததால் அவருக்கு அறுவை சிகிக்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து டாக்டர் லட்சுமி குழந்தையை வெளியே எடுத்த போது, எதிர்பாராத விதமாக குழந்தையின் கால் எலும்பு உடைக்கப்பட்டுள்ளது.
பிறந்த பச்சிளம் குழந்தையின் கால் உடைக்கப்பட்டதையடுத்து கோபம் அடைந்த உறவினர்கள், காலை உடைத்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தலைமை மருத்துவரிடம் குழந்தையின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவ அலுவலர் மோகன், குழந்தையின் கால் எலும்பு உடைந்தது எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவம் இது என்று விளக்கம் அளித்துள்ளார்.