கேலி செய்வார்கள் என குப்பை தொட்டியில் குழந்தையை போட்ட தம்பதி.. குழப்பத்தில் போலீஸ்
நாகர்கோவில் குப்பை தொட்டியில் பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
Recommended Video
நாகர்கோவில்: குப்பையில் கிடந்த ஒரு குழந்தை தங்களுடையதுதான் என்றும், அதனை தங்களிடம் ஒப்படைக்க கோரியும் ஒரு தம்பதி போலீசாரிடம் வேண்டி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே அருகுவிளை தெற்கு தெருவில் ஒரு குப்பை தொட்டி உள்ளது. இந்த குப்பை தொட்டியில் நேற்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் அந்த வழியாக சென்றவர்கள் குப்பை தொட்டியினுள் எட்டி பார்த்தால் அதில் ஒரு பைதான் தெரிந்தது. இருந்தாலும் பைக்குள் குழந்தை அழும் சத்தம் கேட்கவே அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மைய ஊழியர்களிடம் புகார் தெரிவித்தனர்.
பச்சிளம் குழந்தை
விரைந்து வந்த ஊழியர்கள் குப்பை தொட்டியினுள் கிடந்த பையை பிரித்து பார்த்தனர். அதில் ஒரு பச்சிளம் குழந்தை இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். அது ஒரு அழகான பெண் குழந்தை. பிறந்து சுமார் 8 மணி நேரமே ஆகியிருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் அந்த குழந்தையின் தொப்புள் கூட அறுக்கப்படாமல் கிடந்தது. உடனடியாக ஊழியர்கள் காவல்துறைக்கும், சுகாதார துறைக்கும் தகவல் அளித்தனர்.
ஓடிவந்த தம்பதி
இதையடுத்து குழந்தை மீட்கப்பட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை நன்றாக உள்ளது. இதனிடையே போலீசார் குழந்தை கிடந்த குப்பைதொட்டி பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வடிவேல்-பார்வதி என்ற தம்பதியினர் அரக்கபறக்க ஓடிவந்தனர்.
கேலி செய்வார்கள்
அந்த குழந்தை எங்களுடையதுதான் என்றனர். அதற்கு போலீசார், உங்க குழந்தையா இருந்தா, ஏன் குப்பை தொட்டியில் வீசி எறிந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு தம்பதி, "ஏற்கெனவே எங்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். இப்போது நான்காவது குழந்தை என்றால் உறவினர்கள் கேலி செய்வார்கள். அதற்காகத்தான் குப்பை தொட்டியில் போட்டுவிட்டோம்" என்றனர்.
மரபணு சோதனை
இதனை கேட்ட போலீசார், ஆயிரம் காரணங்களை தம்பதி கூறினாலும், மரபணு சோதனை நடத்திய பின்னரே குழந்தையை ஒப்படைப்பது குறித்து முடிவு செய்வோம் என கறாராக சொல்லிவிட்டனர். இப்போது மருத்துவமனையில் அந்த பெண் குழந்தை 2.7 கிலோ எடையுடன் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், இருக்கிறது.