பணபலமும் அதிகார பலமும் கொண்டவர்கள் அனைவருமே எனக்கு எதிரிகள் தான் : ஜெ.தீபா பேட்டி
பணபலமும், அதிகார பலமும் கொண்ட வேட்பாளர்கள் அனைவருமே தனக்கு போட்டியாளர்கள் என்று தீபா தெரிவித்து உள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி நடக்கிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் இன்றோடு முடிவடைவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று சுயேட்சையாக பலர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்து இருந்தனர். அதில் நடிகர் விஷாலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோரும் மனுத்தாக்கல் செய்தனர்.
மனுத்தாக்கலுக்குப் பிறகு ஜெ.தீபா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தான் அரசியலுக்காகப் போட்டியிடவில்லை என்றும், மறைந்த தனது அத்தை ஜெயலலிதாவிற்காக மட்டுமே போட்டியிடுவதாகவும் பதிலளித்தார்.
இந்தத் தேர்தல் முறையாக நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளதாகவும், ஜனநாயகத்தை காப்பாற்ற ஆர்.கே நகர் மக்கள் ஜெயலலிதாவிற்காக தனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், இந்தத் தொகுதிக்காக ஜெயலலிதா செய்ய வேண்டிய கடமைகளை தான் ஆற்ற தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வேட்புமனுத்தாக்கல் செய்துள்ள 134 பேரில் பண பலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்தும் அனைவரும் எனக்கு எதிரி தான். இது இரண்டும் இல்லாமல் களத்தில் இருப்பது நான் மட்டும் தான். டி.டி.வி தினகரனை நான் ஒரு போட்டியாகவே கருதவில்லை. தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே எனக்கு எதிரி தான். அதிலும் அ.தி.மு.க எனக்கு முக்கிய எதிரி என்று ஜெ.தீபா தெரிவித்து உள்ளார்.