அமோக வெற்றி பெறுவேன்- அதிமுக சரோஜா; 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்- திமுக மாறன்
அதிமுக வேட்பாளர் சரோஜா, இன்று பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். முன்னதாக தனது கணவர் பெருமாள் சமாதிக்குச் சென்று அவர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மகன்கள் ராஜேஷ் கண்ணா, சுரேஷ் கண்ணா, சதீஷ், மருமகள்கள் ஜமுனா, சர்மிளா உள்ளிட்டோருடன் போய் வாக்களித்தார்.
ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்மாவின் ஆசியோடு அமோக வெற்றி பெறுவேன். அம்மாவுக்காக மக்கள் வாக்களித்து வருகிறார்கள். வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. தொகுதி மக்களுக்காக சிறப்பாக பணியாற்றுவேன். என் கணவர் விட்டுச் சென்ற பணிகளை தொடருவேன் என்றார்.
25,000 வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன்- திமுக மாறன்
திமுக வேட்பாளர் மாறன், பூவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை ஓட்டு போட்டார். பின்னர் அவர் செய்தியார்களிடம் பேசுகையில், எனது பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே திமுக நிர்வாகிகள், தொண்டர்கள். தீவிர பிரசாரம் செய்தனர். மு.க.ஸ்டாலினும் தீவிர பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.
எனக்கு மக்கள் அமோக ஆதரவு தந்து உள்ளனர். காலையிலேயே கூட்டம் கூட்டமாக வந்து வாக்குச் சாவடியில் நின்று ஓட்டு போட்டு வருகிறார்கள். தளபதி கூறியபடி 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றார்.