வெங்கய்யா நாயுடுவிற்கு ஓபிஎஸ் போனில் வாழ்த்து... நேரில் சந்தித்து ஈபிஎஸ் அணி ஆதரவு
துணை குடியரசுத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவிற்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை: பாஜக சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓபிஎஸ், டெலிபோன் மூலம் வாழ்த்து கூறியுள்ளார். ஈபிஎஸ் அணி எம்.பிக்கள் நேரில் சந்தித்து வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
இந்தியாவின் துணை குடியரசுத்தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்த குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காந்தியின் பேரன், கோபால கிருஷ்ண காந்தியை முன்நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் பாஜக சார்பில் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளாராக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்து வந்த வெங்கையா நாயுடுவை அறிவித்துள்ளனர். இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவு தருவதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவு தருமாறு பிரதமர் நரேந்திர மோடி ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் கேட்டுக்கொண்டார். அவருக்கு ஆதரவு அளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.
இதனிடையே வெங்கய்யா வேட்புமனு தாக்கலின் போது ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் உடனிருந்தார். வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் ஓபிஎஸ் தொலைபேசி மூலம் வெங்கய்யா நாயுடுவிற்கு வாழ்த்து கூறினார்.
இதனிடையே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. தொலைபேசி மூலம் எடப்பாடி பழனிச்சாமியை பிரதமர் மோடி தொடர்பு கொண்டு பேசினார். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி அணி வெங்கய்யா நாயுடுவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தம்பிதுரை தலைமையில் அதிமுக அம்மா அணி எம்.பி.க்கள் பாஜக துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.