நாங்க எல்லாம் ஒன்னுதான்... துரைமுருகனிடம் சைகையில் பேசிய அதிமுக எம்எல்ஏக்கள்- சட்டசபையில் சுவாரஸ்யம்
அதிமுகவில் பிளவு, அணிகளாகப் பிரிவு என்பதெல்லாம் சட்டசபைக்கு வெளியேதான் உள்ளே இல்லை என்று எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக்கும் வகையில் சட்டசபை கூட்டத்தின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் நடந்து கொண்டுள்ளனர்.
சென்னை: அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ. தங்க. தமிழ்ச்செல்வனும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனும் தோள்மேல் கைபோட்டுக் கொண்டு பேசியபடி துரைமுருகனுக்கு சைகை மொழியில் பதில் சொல்லியுள்ளனர்.
அதே போல பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கைகுலுக்கி தனது வாழ்த்துக்களை சட்டசபைக்குள் தெரிவித்தார்.
இந்த இரண்டு காட்சிகளும் சட்டசபையில் நேற்று நடந்துள்ளன. இதில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என்று யாரும் அதிர்ச்சியடையாமல் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தங்க. தமிழ்ச் செல்வனும் முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனும் சிரித்துப் பேசிக் கொண்டு இருப்பதை பற்றி துரைமுருகன் தனக்கு எதிரில் அமர்ந்து இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனைத் திரும்பிப் பார்த்த முதல்வர் 'அதெல்லாம் ஒன்றுமில்லை' என்பதுபோல துரைமுருகனுக்கு சைகையில் பதிலளித்தார். இதனைக் கவனித்த அவர்கள் இருவரும் தோள் மேல் கைபோட்டுக் கொண்டு துரைமுருகனைப் பார்த்து நாங்க எல்லாம் ஒன்னுதான் என்று சைகை காட்டினார்.