மதுரையில் மர்ம காய்ச்சல்... சேலத்தில் டெங்கு காய்ச்சல் - பலியான குழந்தைகள்
சேலத்தில் 2 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியான நிலையில் மதுரையில் 6 வயது சிறுவன் டெங்குவிற்கு பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: டெங்கு காய்ச்சல் சேலம் ஆத்தூரை சேர்ந்த 2 வயது சிறுமி தாரணியின் உயிரை குடித்துள்ளது. இதே போல மர்மகாய்ச்சலுக்கு மதுரையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
மதுரை ஜெய் ஹிந்புரத்தை சேர்ந்த பாலமுருகன், கூலி தொழிலாளி. இவரது மகன் கவினேஸ், 6. சிறுவன் கவினேஷ் சில தினங்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இவர் கடந்த இரண்டு நாட்களாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் இன்று உயிரிழந்தார்.
இதே போல் டெங்கு காய்ச்சலுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சிறுமி தாரணி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி தாரணி இன்று மரணமடைந்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஸ்வேதா என்கிற 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஸ்வேதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இதேபோல திருவள்ளூரில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர். நாகை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.