ஆலடி அருணாவின் பேரன் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்து பலி.. விளையாடிய போது பரிதாபம்
சென்னை: சென்னை தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து 8ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேரன் ஆவார்.
சென்னை தியாகராயநகர், மண்ணடி தெருவை சேர்ந்தவர் கதிரவன். இவர் மறைந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் தம்பி மகன் ஆவார். பருப்பு ஏற்றுமதி தொழில் செய்து வரும் கதிரவனின் 15 வயது மகன் ஆதித் குமார்.
இவர் சென்னை எழும்பூரில் உள்ள டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல நேற்று பள்ளி சென்ற ஆதித்யன், பள்ளி முடிந்ததும், பள்ளி கட்டிடத்தின் 2-து மாடியில் சக மாணவர்களுடன் விளையாடியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி இரண்டாவது மாடியில் இருந்து அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து ஆதித்தியனை ஆசிரியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஆதித் ஏற்கனவே இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசுக்கும், மாணவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உயிரிழந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளி இன்று விடுமுறை அறிவித்துள்ளது.